
இந்நிலையில் பிருந்தாவனத்தில், நந்தருடைய பிள்ளையாக, யசோதையின் செல்லமாக வளர்ந்து வந்த கிருஷ்ணன், மாடு மேய்க்கும் பாலக பருவத்தை அடைந்தான். தினமும் தன்னுடைய நண்பர்கள் புடை சூழ கன்றுகளையும் பசுக்களையும் ஓட்டிக்கொண்டு வனத்தில் சஞ்சரித்து வந்தான்.

அது ஒரு கோடைக்காலம். மாடு மேய்க்க சென்ற ஆயர்களை, ஒரு நாள் உச்சி வேலை வெயில் மிகவும் வாட்டியது. கோபாலர்களில் சிலர் தண்ணீர் தாகத்தை தணித்துக் கொள்ள அருகில் ஏதேனும் நீர்நிலை உள்ளதா என்று தேடிக்கொண்டு காளிய மடுவிற்கு வந்தனர். தண்ணீர் பருகியவுடன் விஷம் தாக்கி கரையிலேயே மூர்ச்சை அடைந்தனர். தண்ணீர் பருக சென்றவர் ஒருவரும் மீண்டு வரவில்லை.
நீர் அருந்த சென்ற தன்னுடைய தோழர்கள் மீண்டு வராததால் அவர்களை தேடிச் சென்ற கிருஷ்ணன், விஷ ஜலம் அருந்தியதால் அவர்களுக்கு நேர்ந்த கதியை பார்த்தான். அதற்கு காரணமான காளியனுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தான். மடுவை ஒட்டி ஒரு கதம்ப மரம் உயர்ந்து அடர்ந்து பரவி இருந்தது. கிருஷ்ணன் தான் செய்ய வேண்டிய காரியத்தை உடனடியாக தீர்மானம் செய்து மிக உயரமான அந்த கதம்ப மரத்தின் மீது ஏறினான். நல்ல உச்சியில் மடுவின் பக்கமாக ஒரு கிளை சென்றது. கண்ணன் அந்த கிளை வழியாக சென்று சற்றே நிதானித்தான். தன்னுடைய இடுப்பு வஸ்திரங்களை இறுக்கி கட்டிக்கொண்டு, மிகுந்த உற்சாகத்துடன் கைகளால் தாளம் செய்துக்கொண்டு, அந்த உயரமான கிளையில் இருந்து மடுவிற்குள் குதித்தான். கண்ணனுடைய இந்த செய்கையால் மடுவின் ஜலம் மிகுந்த கலக்கம் அடைந்தது. நீர் நிலையில் ஏற்பட்ட கலக்கம் உறங்கிக் கொண்டிருந்த காளியனை விழிப்புற செய்தது. அந்த நாகம் கோபத்தை அடைந்து, கலக்கத்திற்கு காரணமான கிருஷ்ணனை நோக்கி விரைந்தது. அந்த நாகத்துடன் சிறிது காலம் விளையாட எண்ணிய கிருஷ்ணன் அதன் பிடியில் சிக்குண்டது போல் ஒரு லீலை செய்தான். இதற்குள் செய்தி பிருந்தாவனத்தில் வசித்த மற்ற கோப-கோபியருக்கு தெரிந்து அனைவரும் மடுவை நோக்கி விரைந்தனர்.

கிருஷ்ணன் பிருந்தாவனத்து ஜனங்களின் உயிராவான். அவர்கள் பசுக்களிடம் பால் கறக்கும் பொழுதும், தயிர் கடையும் பொழுதும், வேறு எந்த வேலையில் ஈடுபடும் பொழுதும், வெறுமனே நிற்கும்பொழுதும், நடக்கும்பொழுதும், கிருஷ்ணன் நினைவாகவே, அவனை பற்றிய பேச்சை பேசிக்கொண்டே காலம் கழித்தனர். "தயிரோ தயிர்", "வெண்ணையோ வெண்ணை " என்று கூவி விற்பதற்கு பதிலாக "கிருஷ்ணாவோ கிருஷ்ணா", "கோவிந்தாவோ கோவிந்தா" என்று கூவிச் செல்வர். கோப-கோபியர்களின் கண்ணுக்கு கண்ணான நீலமணி இன்று ஒரு இக்கட்டில் சிக்கி இருந்தான். கிருஷ்ணனை நீரின் உள்ளே காளியனின் பிடியில் கண்ட பலர் அக்கணமே மூர்ச்சை அடைந்தனர். அன்னை யசோதா, "கிருஷ்ணா! என் கண்ணே !" என்று அலறிக்கொண்டு கிருஷ்ணனை நோக்கி ஓடினார். சில அடிகளிலே அவரும் மயக்கம் அடைந்தார். மடுவினுள் நுழைய முயன்ற எஞ்சி இருந்தவரை பலராமர் தடுத்தார். கிருஷ்ணனுக்கு ஒன்றும் ஆகாது என்றும் அவன் விரைவில் மீண்டு வருவான் என்றும் அனைவர்க்கும் ஆறுதல் மொழி கூறினார்.

நீல நிற மேனியில் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நனைந்த மஞ்சள் ஆடை ஒட்டியிருந்தது. கிருஷ்ணன் தன்னுடைய சிவந்த பாதங்களினால் தாளம் செய்து கொண்டே இடையில் இருந்த தன்னுடைய புல்லாங்குழலை எடுத்து தன் அழகான இதழ்களில் பொருத்தி வாசிக்க தொடங்கினான். இந்த காட்சி மடுவை சுற்றி குழுமியிருந்த பிருந்தாவன ஜனங்களுக்கு ஒரு அரிய விருந்தாக அமைந்தது. மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. அனைவரும் கிருஷ்ணனுடைய இந்த அற்புத நடனத்தில் மனதை பறிகொடுத்து மெய் மறந்து நின்றனர்.

கிருஷ்ணன் அருளால் விஷ ஜலம் அருந்திய கோபர்கள் துயில் நீங்கி எழுவது போல் மீண்டு எழுந்தனர்.
காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்
நீள் முடி ஐந்திலும்* நின்று நடம் செய்து*
மீள அவனுக்கு* அருள் செய்த வித்தகன்*
தோள்வலி வீரமே பாடிப் பற* தூமணி வண்ணனைப் பாடிப் பற*
(பெரியாழ்வார் பாசுரம்)
நீள் முடி ஐந்திலும்* நின்று நடம் செய்து*
மீள அவனுக்கு* அருள் செய்த வித்தகன்*
தோள்வலி வீரமே பாடிப் பற* தூமணி வண்ணனைப் பாடிப் பற*
(பெரியாழ்வார் பாசுரம்)